சென்னை மாவட்டம் ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கு ஸ்கிரீனை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது பெரம்பூரை சேர்ந்த பொறியாளர் ராஜேஷ் என்பவர் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நான்காவது ஸ்கிரீனில் ஹைட்ராலிக் லிப்ட் பழுதானதால் ராஜேஷ், மூத்த பொறியாளர் தனசேகர், தொழில்நுட்ப ஊழியர்கள் முருகன் டேவிட் ஆகியோர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
சுமார் 25 மீட்டர் உயரத்தில் நின்று ராஜேஷ் ப்ரொஜெக்டரை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஏற்கனவே கீழே இறக்கி வைத்திருந்த பழுதான லிப்ட் தானாக இயங்கி மேல் நோக்கி பாய்ந்தது. இதனால் நின்று கொண்டிருந்த ராஜேஷின் தலை கட்டிடத்தில் மேல் தலத்தில் பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மூத்த பொறியாளர் தனசேகரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
