விஜயின் தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. சமீபத்தில் இரண்டாவது மாநாட்டை விஜய் மதுரையில் வைத்து வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் விஜய் பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார். அவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு பேசியதால் அரசியல் தலைவர்கள் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோயம்புத்தூர் துடியலூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் தொடக்க விழாவில் பங்கேற்ற நடிகர் ரஞ்சித் பேசியதாவது, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறோம். பொட்டு வைப்பதற்கு பிரச்சனை சாமி கும்பிடுவதற்கு பிரச்சனை நிலவுகிறது. என்னை சங்கி என்றும், சாதி வெறியன் என்றும் விமர்சனம் செய்கிறார்கள்.
கலாச்சாரத்திற்காக என்னை அப்படி சொன்னால் நான் சங்கி தான். விஜய் மதுரை மாநாட்டில் சொடக்கு போட்டு பிரதமர் மோடியை குறிப்பிட்டு பேசுகிறார். 2014-ஆம் ஆண்டு கோவையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக பூனை போல கையை கட்டி அமர்ந்திருந்ததை தம்பி மறந்து விட்டார் போல.
இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் என்று பிரதமரை விமர்சனம் செய்யும் விஜய் அன்று எந்த மக்களின் பிரச்சினைக்காக மோடியை சந்தித்து பேசினார்? அவரின் தலைவா படம் ரிலீஸ் பிரச்சனை குறித்து பேச தான் அன்று காத்திருந்தார். பிரதமரை மிஸ்டர் என குறிப்பிடுகிறார். முதலமைச்சரை அங்கிள் என சொல்கிறார்.
அவரது மூளையில் ஏதோ பிரச்சனை உள்ளது. உங்களுக்கு அறிவு இல்லையா? இதுதான் அரசியல் நாகரீகமா? உலகமே வியந்து பார்க்கும் பிரதமராக மோடி இருக்கிறார். அரசியலில் நல்லவர்களை சல்லடை போட்டு தேடும் நிலை உள்ளது. எனக்கு வர கோபத்துக்கு ஓங்கி குத்த வேண்டும் போல இருக்கிறது. அதை வாக்கால் குத்தி வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன் என ரஞ்சித் கூறியுள்ளார்.
