தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்ற பிறகு, மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். இதில் 2030 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் பொருளாதார மதிப்பு, ஒரு டில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கை முன்னிறுத்தி பணியாற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு அயல்நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து, அவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் படி கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில், 17 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டு, அங்குள்ள முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதியை சந்தித்து, முதலீடுகளை ஈர்த்துள்ளார். மேலும் அங்கு நடைபெற்ற இன்வெஸ்டார்ஸ் கான்கிளேவ்(investors conclave) முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
பின் செப்டம்பர் மாதத்தில் லண்டனில் உள்ள கிங் கல்லூரியில் உரையாற்றி விட்டு, அங்குள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்க உள்ளார். லண்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி புறப்பட்டு, செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை திரும்பும் வகையில் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
