சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் வாய்ப்பு கேட்டு கடிதம் எழுதி இருந்த நிலையில் அவருக்கு பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து இவர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம் விஜயுடன் கூட்டணி வைக்க உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் தமிழகம் வந்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷை சந்திக்க வருமாறு ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பை அவர் தவிர்த்து விட்டு சொந்த ஊரிலேயே தங்கிவிட்டார். பாஜக மீது அதிருப்தியில் இருந்த அவருடன் டிடிவி தினகரன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் ஓபிஎஸ் தரப்பு பாஜகவுடன் மீண்டும் இணைவதை விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கூட்டணி மாறும் முடிவில் தீவிரமாக உள்ளதாகவும் ஒருவேளை விஜயுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
