தமிழ்நாட்டையே அடமானம் வைத்த நீங்கெல்லாம் வாயை திறக்கலாமா?… இபிஎஸ்-ஐ லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய டிஆர்பி ராஜா…!

By Srimathi on ஆவணி 8, 2025

Spread the love

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டி.ஆர்.பி ராஜா இடையே தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறித்த மோதல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி வளர்ச்சி குறித்து சந்தேகம் எழுப்பிய நிலையில், டி.ஆர்.பி ராஜா திமுக அரசின் சாதனையை புகழ்ந்துள்ளார். இந்தியாவிலேயே இரட்டை இலக்கு வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்பது ஒரு மாய விளம்பரம். தற்போது வெளியிட்ட கணிப்பு இறுதியானது அல்ல, எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில், ஒரு தமிழனாக அதை கண்டு பொறாமை பட்டு வயிற்றெரிச்சலில் புலம்பி வருகிறார் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சித்துள்ளார்.

டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டு மக்களுக்காக, முதலமைச்சர் அவர்கள் கடுமையாக உழைத்ததன் விளைவாக இன்று தமிழ்நாடு 11.19% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில், ஒரு தமிழனாக அதைக் கண்டு பெருமை படாமல், பதிலாக வயிற்றெரிச்சலில் புலம்பி வருகிறார், எதிர்க்கட்சித் தலைவர். தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் பாஜகவை போலவே, அதிமுகவும் அதை வாடிக்கையாக வைத்துள்ளது. தமிழ்நாட்டைப் பற்றிய எந்த ஒரு நல்ல செய்திக்கும், அவர்களின் எதிர்வினை, வேதனைக்குரியதாகவும்  உள்ளது. தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு திமுக அரசின் கொள்கையும், தமிழ்நாட்டு மக்களில் உழைப்புமே காரணமாகும்.

   

தமிழ்நாடு வளர்ச்சி என்பது நிலம் வாங்கி விற்றல்(ரியல் எஸ்டேட்), உணவு விடுதிகள்(ஹோட்டல்) ஆகியவற்றால் நிகழ்ந்தவை என எடப்பாடி கூறுகிறார். அப்படியே இருந்தாலும் கூட, அவரது வாதத்தின்படி பார்த்தால், இந்த தொழில்கள் செழிக்க தமிழ்நாடு மக்கள் இவற்றில் செலவிட வேண்டுமல்லவா? அவர்களுக்கு அந்த வருமானம் எங்கிருந்து கிடைக்கிறது என சிந்திக்க மாட்டாரா? இந்தக் கேள்வியை நினைக்காதது ஆச்சரியப்பட வைக்கிறது.

   

தமிழ்நாடு வளர்ச்சி கண்ட பொறாமையில், அவரது எண்ணம் மலிங்கிப் போய் இருப்பது காண முடிகிறது. மாநில பொருளாதாரத்தில் குறையா வளர்ச்சி, பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, எல்லாரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய தாரக மந்தரத்தைக் கொண்டு செயல்படும் திமுக அரசால் தான் இந்த வளர்ச்சிகளை சாத்தியமாக முடியும். மகளிர் நலனை கருத்தில் கொண்டு திமுக அரசின் கொள்கைகளால், மக்கள் தொகையில் சரிபாதியாக அவர்கள் அதிகாரம் பெற்று,  பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெறுவதால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்கிறது.

 

மின் கட்டணத்தை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேச வெட்கப்பட வேண்டும். ஏனெனில் உதய் திட்டத்தில், கண்முடித்தனமாக கையெழுத்திட்டு தமிழ்நாட்டை டெல்லியில் அடமான வைத்த அவர், இது குறித்து வாயை திறக்கலாமா? என்றார். சொன்னால் புரிந்து கொள்பவர்களுக்கு இன்னும் கூட விளக்கமாக பதில் சொல்லலாம், ஆனால் சொந்த மண்ணின் வளர்ச்சி பார்த்து பொறாமைப்படுபவர்களுக்கு என்ன சொல்லியும் புரியப்போவதில்லை, இது மக்களுக்கான விளக்கம் என தெரிவித்துள்ளார்.