திருச்சூரில் 23 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் தன்னுடைய கணவர் மற்றும் மாமியாரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்களின் வரிசையில் தற்போது இந்த சோகமும் இணைந்துள்ளது. வெள்ளங்குளாரியல் வசித்து வரக்கூடிய நௌபல் என்பவருடைய மனைவி பசீலா. தன்னுடைய கணவர் வீட்டில் இவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். உயிரிழப்பதற்கு முன்பு தன்னுடைய தாய் மற்றும் சகோதரிக்கு whatsapp மூலமாக பல செய்திகளையும் அவர் அனுப்பியுள்ளார்.
அதில் தன்னுடைய கணவர் தன்னை பலமுறை வயிற்றில் உதைத்ததாகவும் தன்னுடைய கையை உடைத்ததாகவும் கண்ணீருடன் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மாமியாரும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாக அந்த பெண் கூறி உள்ளார். மேலும் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று தனது தாயிடம் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டியதாக அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
