தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற சிந்தனையில் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக சொல்லிக் கொண்டிருக்க ஈபிஎஸ் தான்தான் முதல்வர் வேட்பாளர் என மறுபக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதேசமயம் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதை தாங்கள்தான் முடிவு செய்வோம் என்றும் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் கூட்டணி ஆட்சி என்று பாஜகவினரும் தனித்து ஆட்சி என்று அதிமுகவினரும் கூறி வருகிறார்கள். இதனால் அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது.இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் ஈபிஎஸ் தனது கூட்டணியை மேலும் பலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இப்படியான நிலையில் விறுவிறுப்பாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஈ பி எஸ் கட்சியை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றார். அவ்வகையில் ராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மன்னர்களின் வாரிசான நாகேந்திரன் சேதுபதி இபிஎஸ் முன்னிலையில் தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் . இதன் மூலம் குறிப்பிட்ட சமூக வாக்குகளை பெற அதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
