தமிழ் சினிமாவில் புராணங்கள் மற்றும் இலக்கியங்கள் என பழகிப்போன கதைகளையே மீண்டும் மீண்டும் படமாக எடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் பல்வேறு சமூக கருத்துக்கள் கொண்ட படங்களை வழங்கி சினிமா மூலமாக சமூகத்தில் மாற்றத்தை கொடுக்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர் தான் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சினிமா என்பது ஒரு கலையாக மட்டுமல்லாமல் அது மக்களின் ஒரு உணர்வாக பார்க்கப்பட்டு வருகின்றது. திரையில் தோன்றும் நாயகர்களை நிஜத்திலும் ஹீரோக்களாக பார்க்கும் பழக்கம் இன்று வரை இருந்து வருகிறது. அதன்படி சினிமா பிரபலங்களை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடிய காலத்தில் அந்த சினிமாவின் உண்மையான சக்தியை கண்டறிந்து அதனை முழுமையாக பயன்படுத்தியவர் தான் கருணாநிதி.

சிறுவயது முதலே தமிழ் மொழியின் மீது அதிகம் பற்று கொண்டிருந்த கருணாநிதி நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகளை எழுதி தன்னுடைய எழுத்து திறமையை மெருகேற்றி வந்தார். அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் திரைக்கதைகளை எழுதினார். தமிழகத்தில் திராவிட கொள்கைகள் இன்றளவும் வேரூன்ற முக்கிய காரணம் கருணாநிதி தான். அவர் திரைக்கதை எழுதிய பெரும்பாலான படங்களில் திராவிட கொள்கைகளை விதைத்து அதனை மக்கள் மனதில் புகுத்தினார். அவர் முதன் முதலில் சினிமாவில் திரைக்கதை எழுதிய படம் என்றால் அது ராஜகுமாரி தான். எம்ஜிஆர் நடிப்பில் ஆயிரத்து 947 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் எம்ஜிஆர்-க்கும் கலைஞருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

கலைஞர் தான் பணியாற்றிய பெரும்பாலான படங்களில் சமூக கருத்துக்களை பதிவு செய்திருந்தாலும் தற்கால சமூக பிரச்சினைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தி அவரின் பராசக்தி திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு கலைஞர் எழுதிய வசனங்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்தப் படத்தில் சிவாஜி பேசிய ஒவ்வொரு வசனமும் அந்த அளவிற்கு அனல் பறக்கும். இப்படிப்பட்ட வசனங்களை எழுதும்போது கலைஞரின் வயது வெறும் 28 தான்.

அவர் எழுதிய வசனங்களை அனல் பறக்க பேசும் போது சிவாஜியின் வயது வெறும் 24 தான். எல்லா எழுத்தாளர்களும் காசுக்காக தான் எழுதுறாங்க. அப்படித்தான் கருணாநிதியும். ஆனால் மற்ற எழுத்தாளர்களைப் போல இல்லாமல் கருணாநிதியிடம் இருந்த சிறப்பு என்னவென்றால் எழுதும்போது தன்னுடைய கொள்கைகளை எப்படியாவது அந்த படங்களில் சேர்த்து விடுவது தான். அதன் காரணமாகத்தான் கலைஞர் எழுதிய பல படங்களில் அவர் தனியாக தெரிந்தார்.
