போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலம் மூலமாக எட்டு நாள் பயணமாக கடந்த ஜூலை மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய வம்சாவழியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பூச் வில்மோர் ஆகியோரை அழைத்து கொண்டு சென்று இருந்தது. ஆனால் ஸ்டார் லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. அடுத்தடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் அவர்கள் சென்ற ஸ்டார் லைனர் மட்டும் வீரர்கள் இல்லாமல் பூமி திரும்பியது. இப்படியான நிலையில் நீண்ட தாமதத்திற்கு பிறகு அவர்கள் பூமிக்கு வந்தடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அவர்களை மீட்க விண்வெளிக்கு சென்று இருந்தது. அந்த விண்கலத்துடன் நான்கு வீரர்கள் சென்று இருந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி நேற்று காலை 10.30 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 வீரர்களுடன் பூமி திரும்பியது.

17 மணி நேரத்திற்கு பிறகு இந்திய நேரப்படி இன்று காலை 3.15 மணிக்கு பூமியின் வளிமண்டலத்திற்குள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் 4 வீரர்களுடன் நுழைந்தது. அப்போது சுமார் 1600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்பட்டது. அப்போது விண்வெளி வீரர்கள் அதிக அளவு அழுத்தத்தை உணர்ந்தனர். தொடர்ந்து மூன்று புள்ளி 20 மணிக்கு பூமியை நெருங்கிய டிராகன் விண்கலத்தின் முதல் இரண்டு பாராஷூட் வெற்றிகரமாக விரிந்தது.

அப்போது நாசாவில் விஞ்ஞானிகள் கைதட்டி உற்சாகமாக வீரர்களை வரவேற்றனர். தொடர்ந்து அடுத்த கட்டமாக நான்கு பெரிய பாரசூட்கள் விரிந்தன. சிறிது நேரத்திலேயே ஃப்ளோரிடா கடலில் டிராகன் விண்கலம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இறங்கியது. சிறிது நேரத்திற்கு பிறகு அமெரிக்க கடற்படை மற்றும் நாசா மீட்பு படை வீரர்கள் விண்கலத்தில் இருந்து வீரர்களை பத்திரமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து 280 நாட்களுக்கு மேலாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்பியுள்ளார்.
Splashdown of Dragon confirmed – welcome back to Earth, Nick, Suni, Butch, and Aleks! pic.twitter.com/M4RZ6UYsQ2
— SpaceX (@SpaceX) March 18, 2025
