தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. வயதானாலும் உன் ஸ்டைல் மாறல என்று படையப்பா படத்தில் நீலாம்பரி சொல்லும் டயலாக் போல 70 வயதை கடந்த பிறகும் இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் விதமாக ரஜினி நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இடையில் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய திரை வாழ்க்கையில் முள்ளும் மலரும் என்ற திரைப்படம் ஒரு மைல் கல் என்று தான் சொல்ல வேண்டும். எத்தனை அபாரமான நடிப்பு, கண்பார்வையிலே அவர் காட்டும் உணர்ச்சிகள் அற்புதமானவை. படத்தில் கோபம், பாசம், காதல் என அவருடைய உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு ஏற்ப, அவருடைய உடல் மொழியும் மாறுபடும். குறிப்பாக ஒரு கையை இழந்த பிறகு அவருடைய உடல் மொழி மற்றும் பேச்சு என அனைத்துமே அப்படத்தில் மாறிவிடுகிறது.
![முள்ளும் மலரும் [1978] | giriblog](https://www.giriblog.com/wp-content/uploads/2023/07/Mullum-Malarum2.webp)
இறுதி காட்சிகளில் அவருடைய தங்கையின் முடிவை எதிர்பார்த்து காத்து நிற்கும் விதமும் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து வெளிப்படுத்தும் பாங்கு நடிப்பில் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். முள்ளும் மலரும் படத்தில் வசனங்கள் அலங்காரமற்றவை இருந்தாலும் மனதில் அழுத்தமாக பதியக்கூடியவை. அதன் காரணமாகத்தான் அப்படத்தில் இடம்பெற்ற “கெட்ட பையன் சார் இந்த காளி” என்ற வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. முள்ளும் மலரும் மகேந்திரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம். ஒரு இயக்குனரின் முதல் படம் எப்படி அமைய வேண்டும் என்ற உதாரணத்திற்கு முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தை சொல்லலாம் என்கிறார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.
