அந்த பாடகர தேடி நான் ஜெயிலுக்கே போயிட்டேன்… ‘வா முனிம்மா’ பாட்டைப் பற்றி சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்த தேவா!

By vinoth on மாசி 21, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 90 களில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த போது தனி வழியில் சென்றவர்தான் தேனிசைத் தென்றல் தேவா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களொடும், பாலச்சந்தர், பாரதிராஜா, வசந்த் என முன்னணி இயக்குனர்களோடும் பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த தேவா இப்போது மீண்டும் அறம் கோபி இயக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். தேவாவின் சினிமா வாழ்க்கையில் அவர் ரஜினிக்காக இசையமைத்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய இரு படங்களும் மைல்கல்லாக அமைந்தன. அதுவரை ரஜினி – இளையராஜா காம்பினேஷன் வெற்றிக்கொடி நாட்டி வந்த நிலையில் தேவா ரஜினி படங்களுக்கு தன்  இசையால் புத்துயிர் ஊட்டினார்.

   

2000 களுக்குப் பிறகு இசையின் வடிவம் மாறியதாலும் புது இசையமைப்பாளர்கள் அறிமுகத்தாலும் தேவா மெல்ல மெல்ல வாய்ப்புகளை இழந்து ஓரம் கட்டப்பட்டார். பல ஆண்டுகள் காணாமல் போயிருந்த தேவா தற்போது சில படங்களுக்கு மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். அதில் அறம் இயக்குனர் கோபி நயினார் இயக்கும் படமும் ஒன்று.

   

தேவா எல்லா வகையான பாடல்களுக்கும் இசையமைத்திருந்தாலும் அவரின் அடையாளமாக இன்றளவும் சொல்லப்படுவது காணாப் பாடல்கள்தான். சென்னையின் அடையாளமாக இருந்த கானாப் பாடல்களை சினிமாவுக்கு ஏற்றதுபோல மாற்றி ஹிட்ஸ்களைக் கொடுத்தவர் தேவா.

 

அப்படி அவரின் ஹிட் பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்ததுதான் ‘இந்து’ படத்தில் இடம்பெற்ற ‘வா முனிம்மா’ பாடல். அந்த பாடல் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை தேவா ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். அதில் “அந்த பாடலை சென்னையின் பிரபல கானா பாடகரான பழனியப்பன் என்பவரைதான் பாடவைக்க வேண்டும் என விரும்பி தேடினேன். ஆனால் அப்போது அவர் ஒரு கொலை வழக்கில் சிறைச் சாலையில் இருந்தார்.

ஜெயிலுக்கும் சென்று அவரைப் பார்த்தேன். அதிகாரிகளும் அவரைப் பாடவைக்க சம்மதம் சொன்னார்கள்.ஆனால் பாடும் போது அவர் கைகளில் விலங்கு போட்டுதான் பாடவைக்க வேண்டும் என்றார்கள். ஒரு கலைஞனை கைகளில் விலங்கோடு பாடவைக்க எனக்கு சம்மதம் இல்லை. அதனால் நான் மறுத்துவிட்டேன். பின்னர்தான் அந்த பாடலை மனோ பாடினார்” எனக் கூறியுள்ளார்.