வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் சுசீந்திரன். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு மற்றும் நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கி வெற்றி கண்டுள்ளார். அதன்படி இவர் சிம்புவை வைத்து இயக்கி இருந்த திரைப்படம் தான் ஈஸ்வரன். கடந்த 2021 ஆம் ஆண்டு நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்புவுக்கு இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை பெற்று தந்தது.

அதனைத் தொடர்ந்து பாயும் புலி, வில் அம்பு, கென்னடி கிளப் உள்ளிட்ட திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதையை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். இப்படியான நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் இயக்கத்தில் இறுதியாக டூ கே லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படியான நிலையில் சுசீந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ஜெய் பற்றி பேசி உள்ளார். அதில், என் சினிமா வாழ்க்கையில் நெருங்கி பயணித்த நண்பர் தான் ஜெய். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் என்னுடைய அறிமுகம் இல்லை. அவர் ஒரு அற்புதமான நடிகர். கிளிசரின் போடாமல் உண்மையிலேயே அழக்கூடிய அளவுக்கு திறமை வாய்ந்தவர். அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய வாழ்க்கை உள்ளது. இன்றைய தலைமுறை இளம் இயக்குனர்களின் கதைகளை கேட்டு அதற்கு ஏற்றது போல நடித்தால் ஒரு நல்ல சினிமா கேரியர் உள்ளது. எல்லா நடிகருடைய வெற்றி தோல்விக்கு பின்னால் இருப்பது கதை தேர்வு தான்.

ஆனால் ஜெய் சினிமாவில் சரிக்கி கொண்டிருக்க முக்கிய காரணம் கதை தேர்வு சரியாக இல்லை. அதை அவர் சரியாக பண்ணினாலே சினிமாவில் உச்சத்திற்கு சென்று விடுவார். அவரை இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போது வந்தது என்றால், நீண்ட நாட்கள் இருவரும் ஒரே ரூமில் தான் இருந்தோம். அப்போது அடிக்கடி அவர் டியூன் போட்டுக் கொண்டிருப்பார். அப்போது அவர்கிட்ட நான் கேட்டபோது அவர் நான் ஒரு வெப் சீரிஸ் பண்ண போறேன் அதற்காக டியூன் போட்டு கொண்டு இருக்கிறேன் என்று சொன்னார்.

உடனே மியூசிக் உங்களுக்கு தெரியுமா என்று நான் கேட்டதும் 5th லெவல் வரைக்கும் படிச்சிருக்கேன் என்று சொன்னாரு. அதன் பிறகு தான் நீங்க தேவா சார் ஃபேமிலி இல்ல நான் மறந்துட்டேன் என்று சொன்னதும் அவர் டியூன் போட்டு காமிச்சாரு. அத பாத்ததும் பேசிக்காக ஒரு மியூசிக் டைரக்டருக்கு இருக்க வேண்டிய அத்தனை திறமையும் அவருக்கு இருந்தது. அதைப் பார்த்ததும் குற்றம் குற்றமே திரைப்படத்திற்கு ஏற்கனவே ஒருவரை முடிவு பண்ணியாச்சு அதனால் அடுத்த சிவ சுவா படத்திற்கு நீங்க தான் மியூசிக் டைரக்டர் என்று நான் அவர்கிட்ட சொன்னேன் என்று சுசீந்திரன் பேசியுள்ளார்.
