தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
முன்னணி நடிகர்களை வைத்து கதையில் அதிக சமரசங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். சமீபத்தில் அவர் இயக்கிய விடுதலை 2 மட்டும் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை.
இதையடுத்து அவர் நீண்டகாலமாகக் காத்திருக்கும் வாடிவாசல் படத்தைத் தொடங்குவார் என தெரிகிறது. இந்த படத்தில் சூர்யா, அமீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஜி வி பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெற்றிமாறன் வெற்றிமாறன் தன்னுடைய முதல் படத்துக்கே விஜய்க்கு கதை சொன்ன சம்பவத்தைப் பற்றி பார்க்கலாம். வெற்றிமாறன் பாலு மகேந்திரா மற்றும் கதிர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர் தன்னுடைய முதல் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் போது ஆங்கிலத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்த ‘Roots’ என்ற நாவலின் தாக்கத்தில் ஒரு கல்லூரி மாணவன் பற்றிய கதையை எழுதி அதை விஜய்க்காக அவரது தந்தை SAC யிடமும் சொல்லியுள்ளார்.
அந்த கதை தன்னுடைய கல்லூரி நண்பன் ஒருவனை பல ஆண்டுகள் கழித்து அவருடைய நண்பர்கள் தேடுவதைப் போன்ற ஒரு கதையாம். ஆனால் அந்த கதை SAC க்குப் பிடிக்காததால் அந்த படம் அப்போது நடக்கவில்லை. ஆனால் அதே பாணியில் விஜய் நண்பன் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
