இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார். தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜிஆர் தனக்கு நெருக்கமான பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இருந்தாலும் நடிகர் கே. பாக்கியராஜ் அவர்களை மட்டும் தனது கலை வாரிசாக அறிவித்திருந்தார். எம்ஜிஆரின் இந்த அறிவிப்பு அந்த காலகட்டத்திலேயே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் புதிய வார்ப்புகள் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா உள்ளிட்ட பல படங்களை இயக்கி ஹீரோவாக நடித்து வெற்றி கண்டார். அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகளுக்கு பிடித்தமான நாயகனாக வளம் வந்த பாக்கியராஜ் எம்ஜிஆர் நடித்த பாதையில் நின்று போன அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தை கையில் எடுத்துக் கொண்டு தனியாக திரைக்கதை அமைத்து அவசர போலீஸ் 100 என்ற பெயரில் வெளியிட்டு வெற்றி கண்டார். எம்ஜிஆர் மற்றும் பாக்யராஜ் இறையை நெருக்கமான உறவு இருந்தபோது எனது கலை உலக வாரிசு பாக்யராஜ் தான் என்ற எம்ஜிஆர் அறிவித்தார்.

இது ஏன் என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள பாக்யராஜ், எம்ஜிஆர் என்னை கலை வாரிசு என்று அறிவித்த இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு பொதுக்கூட்டத்தில், சினிமாவில் நான் செய்ய பல வருடங்கள் எடுத்துக்கொண்ட செயல்களை இந்த பையன் ஆரம்பித்த சில வருடங்களில் செய்து விட்டான். எனக்கென்று ஒரு பெரிய மாஸ் வருவதற்கு எனக்கு பல ஆண்டுகள் ஆனது. ஆனால் இவ்வளவு சின்ன வயதில் பாக்யராஜுக்கு அந்த மாஸ் கிடைத்துள்ளது. இதனால்தான் அவரை என்னுடைய கலை வாரிசு என்று அறிவித்தேன் என தெளிவு படுத்தியதாக பாக்யராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
