தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
இயக்குனர் பாலாவுக்கு சமீபகாலமாக திரைவாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய தாரை தப்பட்டை படம் அட்டர் ப்ளாப் ஆனது. வர்மா படம் அவர் இயக்கியது பிடிக்கவில்லை என்று மீண்டும் வேறொரு இயக்குனரால் இயக்கப்பட்டது. அதே போல சூர்யாவை வைத்து அவர் முதலில் இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அருண் விஜய்யை வைத்து அவர் வணங்கான் படத்தை ரிலீஸ் செய்துள்ளார். அந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது.
அவர் படம் மூலமாகக் கவனம் பெற்ற நடிகர்களில் ஒருவர் சங்கீதா. அவர் கதாநாயகியாக பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அவர் பாலாவின் பிதாமகன் படத்தில் நடித்த பின்னர்தான் அவரை ரசிகர்கள் கண்டுகொண்டார்கள்.

இந்நிலையில் அவர் தனக்கு எப்படி பிதாமகன் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது என்பது பற்றி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “நான் ஆந்திராவில் இருந்த போது ஒரு நாள் பாலா சார் அழைத்து ‘என்ன செய்கிறாய்?’ எனக் கேட்டார். நான் ‘சும்மாதான் இருக்கேன் சார்’ என்றேன். உடனே மதுரை வர சொல்லி பிதாமகன் படத்தின் வாய்ப்பைக் கொடுத்தார்.
ஆனால் சில நாட்கள் ஷுட்டிங் முடிந்த பின்னர்தான் எனக்கு முன்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் ஓடிப்போய்விட்டார் என்பது எனக்குத் தெரியவந்தது. இதை எனக்கு பாலா சார் சொல்லவெ இல்லை.” எனக் கூறியுள்ளார்.
