தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவரின் அடுத்த படமான ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் சில ஷாட்களில் நடித்திருப்பது ரஜினியே இல்லை என்றும் டூப் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த கிள்ம்ப்ஸ் வீடியோவின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், அதில் ரஜினிகாந்த் நடித்துள்ளதை உறுதி செய்தது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த இயக்குனர் மனோ பாலா அளித்த நேர்காணலில் தன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் படத்தில் குதிரையேற்றக் காட்சி ஒன்றில் நடிக்க ரஜினிகாந்த் பயந்து டூப்பைப் பயன்படுத்திக் கொள்ள சொன்னதாக தெரிவித்துள்ளார்.
அதில் “ஊர்க்காவலன் படத்தில் ஒரு குதிரை சேஸிங் காட்சி. ஆனால் அந்த காட்சியில் நடிக்க ரஜினி முடியாது என்று சொல்லிவிட்டார். அதற்கு முன்னர் ஒரு படத்தில் அதே போலக் காட்சியில் நடித்தபோது அவருக்கு விபத்து ஏற்பட்டது . அதனால் அந்த ஸ்டண்ட் காட்சியின் 90 சதவீதத்தை நான் டூப் வைத்துதான் எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.
