தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது அவர் ஒரு பன்முகத்திறன் கொண்ட கலைஞர் என்பதுதான். சந்திரபாபு வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் பாடல்கள் பாடுவது, நடனமாடுவது, படத்தை இயக்குவது என பல துறைகளிலும் ஜொலித்தவர்.
வெற்றிகரமான நடிகராக வலம் வந்த சந்திரபாபு, தன்னுடைய 50 வயதுக்குள்ளாகவே அகால மரணமடைந்தார். அதற்கு அவரின் மோசமான குடிப்பழக்கமே காரணம் என்று சொல்லப்படுகிறது. சந்திரபாபு நகைச்சுவை நடிகராக மக்களை சிரிக்க வைத்தாலும், அவர் வாழ்வில் அவர் சந்தித்தது பெரும்பாலும் சோகங்களே.

#image_title
சினிமா வாய்ப்பு தேடிய காலங்களில் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு, அந்த வழக்கில் தனக்காக தானே வாதாடி நீதிபதியையே சிரிக்க வைத்து விடுதலை ஆனார். அதன் பின்னர் சில ஆண்டுகளிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைத்து, அவர் நினைத்துப் பார்க்காத அளவுக்கு புகழின் உச்சத்துக்கு சென்றார்.
ஆனால் அவரின் பிடிவாதம் மற்றும் குடிப்பழக்கத்தால் தான் அடைந்த புகழை அவரால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. படத் தயாரிப்பில் இறங்கி அனைத்து சொத்துகளையும் இழந்து பொருளாதார ரீதியாக நசிவடைந்து தன்னுடைய 50 வயதுக்குள்ளாகவே உடல்நிலை மோசமாகி இறந்தார். ஆனாலும் இப்போதும் அவரது பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில் விரைவில் சந்திரபாபு பயோபிக் திரைப்படம் உருவாக உள்ளதாகவும் அதில் தனுஷ், சந்திரபாபுவாக நடிக்க உள்ளதாகவும் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இதற்காக சந்திரபாபுவின் உறவினரிடம் இருந்து படமாக்குவதற்கான உரிமையைப் பெற்றுள்ளார்களாம். விரைவில் இதுகுறுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகு என சொல்லப்படுகிறது.
