தமிழ் சினிமாவில் காமெடி என்றால் அனைவருடைய நினைவுக்கும் வருவது விவேக் தான். தன்னுடைய நகைச்சுவையால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டவர். நகைச்சுவை மூலம் சமூக கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாக நமக்கு வழங்கி வந்தவர். இப்படி புகழ்மிக்க கலைஞரான விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு காலமானார். இவருடைய இழப்பு தமிழ் திரை உலகிற்கு மட்டும் அல்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இவர் இறந்ததற்குப் பிறகு திரையுலக நட்சத்திரங்களும் ரசிகர்களும் விவேக் குறித்து பல சுவாரசியமான நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் விவேக் மனைவி அருள்செல்வி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் தனது கணவர் குறித்து பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது, பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக முயற்சித்து வந்த நிலையில் அந்த படத்தின் கதாபாத்திரங்களை விவரித்து எழுதி வர பாலசந்தர் சொல்லி இரண்டு நாட்கள் டைம் கொடுத்தார். இரவு முழுவதும் உட்கார்ந்து எழுதி அடுத்த நாள் காலையில் பாலசந்தர் வீட்டுக்கு விவேக் சென்றதை பார்த்து அவரே ஷாக் ஆகிவிட்டார். அனைத்தையும் படித்துப் பார்த்துவிட்டு இதில் ஒரு கதாபாத்திரத்தில் நீயே நடித்து விடு என்று சொல்ல அப்படித்தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் என்னுடைய கணவர்.

நானும் மதுரைக்கார பொண்ணு தான். என்னுடைய கணவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. அவர் எந்த ஊருக்கு ஷூட்டிங் சென்றாலும் அங்கு இருக்கும் அனைத்து கோவிலுக்கும் சென்று விட்ட தான் வருவார். அவர் கடவுளை நம்புபவர் தான். ஆனால் கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை ஒருபோதும் நம்ப மாட்டார். மற்றவர்களுக்கும் இந்த அறிவுரையை தான் கூறுவார். என்னையும் என் குழந்தைகளையும் எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளுக்கும் எப்போதும் அழைத்துக் கொண்டு போக மாட்டார்.

எங்களை அழைத்துச் சென்றாள் கவனம் சிதறிவிடும் என்றும் ஒரு நிகழ்ச்சிக்கு தனிமையில் செல்லும் போதே முழு கவனமும் அங்கு இருந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடியும் எனவும் என் கணவர் கூறுவார். வீட்டுக்கு வந்துவிட்டால் கணவராகவும் அப்பாவாகவும் தான் எப்போதுமே இருப்பார். சினிமா அவருக்கான பாதை என்றும் அதற்குள் குடும்பம் வர வேண்டாம் என்றும் சொல்லி சொல்லியே குழந்தைகளை வளர்த்தார். விடுமுறை நாட்களில் மட்டுமே எங்களை தனியாக வெளிநாடுகளுக்கு மற்றும் பல இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வார். சூட்டிங் செல்லும்போது எப்போதுமே அழைத்துச் சென்றது கிடையாது என்று விவேக் மனைவி பேசியுள்ளார்.
