தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில் வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.
திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார்.
அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் எம் ஜி ஆர் வாலியை தன்னுடைய ஆஸ்தான கவியாக மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் பல நடிகர்களுக்கு எழுதிய வாலி, கடைசியாக சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். வாலியைப் பொறுத்தவரை திரையுலகில் அனைவருமே அவருக்கு நண்பர்கள்தான். சக பாடல் ஆசிரியர்கள் முதற்கொண்டு அனைவருமே அவரிடம் அன்பாகப் பழகுவார்கள்.
வாலியைப் பொறுத்தவரை எப்போதுமே அவர் இரண்டாம் ரேங்க் எடுக்கும் மாணவர்தான். கண்ணதாசன், வைரமுத்து மற்றும் நா முத்துகுமார் உள்ளிட்டவர்கள் அந்தந்த சீசனில் முதல் ரேங்க் எடுப்பார்கள். ஆனால் இவர்கள் எல்லோர் காலத்திகும் வாலிதான் செகண்ட் ரேங்க். வாலி இறப்பதற்கு முன் 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். அதில் பல பாடல்கள் கமர்ஷியல் பாடல்கள்.
ஆனால் அவர் எழுதியதிலேயே தனக்கு மிகவும் பிடித்த வரி என்று “தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை/ என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்” என்ற வரிகளைதான் சொல்கிறார். இதை ஒரு இடத்தில் பல இடத்தில் சொல்லியுள்ளார். அதனால் அவரது மனதுக்கு நெருக்கமான பாடல் இதுதானென்பது தெரியவருகிறது. இந்த பாடல் எம் ஜி ஆர் நடித்த பணம் படைத்தவன் படத்துக்காக எழுதப்பட்ட காதல் தோல்வி பாடல்.
