தூங்கும்போது நம் அனைவருக்கும் கனவுகள் வருவது வழக்கம். ஒரு சில கனவுகள் நினைவில் இருக்கும். ஒரு சில கனவுகள் மறந்துவிடும். அது நல்லவையாக இருக்கலாம் அல்லது கெட்டவைகளாக இருக்கலாம். ஆனால் ஒரு சில கனவுகள் வருவதினால் அதற்கு ஏற்ற பலன்கள் இருக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அப்படி கடவுள்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? எந்த கடவுள் கனவில் வந்தால் என்ன பலன்கள் என்பதை பற்றி இனி காண்போம்.

பெரும்பாலானோருக்கு கடவுள் கனவில் வருவதில்லை. ஆன்மீக நாட்டம் உள்ளவர்களுக்கு அதிகமாக வரும் ஏனென்றால் அவர்கள் எப்போதும் கடவுளை நினைத்து மந்திரங்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கடவுளை பற்றி அடிக்கடி கனவில் காண்பது நீங்கள் மகிழ்ச்சியாகவும் உங்கள் வாழ்க்கை திருப்தியாகவும் இருப்பதை குறிக்கிறது. கடவுள்கள் கனவில் வந்தால் நீங்கள் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் கோயில்கள் கனவில் வந்தாலும் நல்லது நடக்கும் என்று கூறுவார்கள். நீங்கள் தெய்வ சக்தியோடு இணைந்து நெருங்கி இருக்கிறீர்கள் என்பதற்கு சான்றாக தான் கடவுள்கள் கனவில் வருவதற்கு அர்த்தமாக கூறப்படுகிறது.
விநாயகப் பெருமான் உங்கள் கனவில் வந்தால் உங்களை சுற்றி உள்ள பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வரும் என்பதை குறிக்கிறது. முருகப்பெருமான் உங்கள் கனவில் வந்தால் நடப்பவைகள் அனைத்தும் நன்மையில் முடியும் உங்கள் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீக்கும். பெண் தெய்வங்கள் கனவில் வந்தால் உங்கள் எதிரிகள் பலமிழந்து போவார்கள் மற்றும் வெற்றி உங்களை தேடி வரும்.
காவல் தெய்வங்களை கனவில் கண்டால் சகல ஐஸ்வர்யங்கள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். காவல் தெய்வங்கள் என்றால் மாரியம்மன், திரௌபதி அம்மன், சுடலைமுத்து, கருப்பசாமி, காத்தவராயன், முனியாண்டி, சொரிமுத்து ஆகிய தெய்வங்களை காவல் தெய்வங்கள் என்று அழைப்பர்.
பெருமான் அல்லது சிவலிங்கம் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வர போகிறது என்று அர்த்தம். நல்ல காலம் வரப்போகிறது என்பதையும் உணர்த்துகிறது. லட்சுமி தேவியை உங்கள் கனவில் கண்டால் செல்வ செழிப்பு உண்டாகும். அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியை கனவில் கண்டால் அபரிதமான செல்வத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

துர்கா தேவியை சிவப்புநிற ஆடையுடன் கனவில் நீங்கள் பார்த்தால் உங்கள் வாழ்க்கையில் மங்களகரமான நிகழ்வு நடக்கப் போகிறது என்று கூறப்படுகிறது. அதே போல் துர்கா தேவியோடு கர்ஜனை செய்யும் சிங்கத்தை கண்டால் ஏதோ பிரச்சினை வருவதை குறிக்கிறது என்றும் கூறுகிறார்கள். பொதுவாக கடவுள்கள் கனவில் வந்தால் அது உங்கள் வாழ்க்கையில் மேம்பாட்டையும் நற்பலன்களுமே தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
