தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.
16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கு உடனேயே பெரிய வாய்ப்புகள் உருவாகிவிடவில்லை. கிடைத்த கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். 80 களுக்கு பிறகே அவர் செந்திலோடு இணைந்து தங்களுக்கென ஒரு ஸ்டைல் காமெடியை உருவாக்கினார்.
இருவரும் 20 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து நடித்த நிலையில் கடைசியாக நடித்த எஸ் மேடம் படத்தில் இரண்டு பேரின் காமெடியும் சிறப்பாக அமைந்திருக்கும். அந்த படத்தில் அஜித் விஜய் ஆகிய இருவரையும் கவுண்டமணி செம்மையாகக் கலாய்த்திருப்பார்.
கார்மெண்ட்ஸ் கம்பெனியில் கவுண்டமணி செந்தில் இருவரும் வேலை பார்க்க, செந்திலை அங்கிருப்பவர்கள் ‘தல’ என்று அழைப்பார்கள். அதைக் கேட்டு கடுப்பாகும் கவுண்டமணி ‘ஏண்டா தலைவா –ங்குறதே நாலெழுத்து அதை சுருக்கி இவன தல-ன்னு கூப்புடுறீங்களா?” என சொல்லி கலாய்ப்பார். தன் சக நடிகர்களை திரைக்குப் பின் கலாய்ப்பதில் கவுண்டமணி ஆர்வம் காட்டுவார். ஆனால் அஜித்தை ஒரு படத்திலேயே கலாய்த்திருப்பது ஏனென்று தெரியவில்லை.
அந்த படம் வருவதற்கு முந்தைய ஆண்டுதான் அஜித்தின் ‘தீனா’ திரைப்படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தில் அஜித்தை ‘தல’ என்று அழைக்க, அதுவே அவரின் பட்டப்பெயர் ஆனது. அப்போது முதல் அஜித்தை தல என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
