தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
அதே போல அவரின் போட்டியாளராக இருப்பவர் அஜித். இவரும் விஜய் அறிமுகமான அதே காலகட்டத்தில் அறிமுகமாகி, அதேகால கட்டத்தில் வளர்ந்து, இன்று தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையும், மார்க்கெட்டையும் வைத்துள்ளார்.
இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கருதப்படுவதால் அடிக்கடி இவர்களின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வார்த்தைப் போர்களில் ஈடுபடுவர். சமீபகாலமாக அந்த போக்குக் குறைந்திருந்தாலும், அவர்களின் படங்கள் ரிலீஸாகும் போது திடீரென சோஷியல் மீடியாவே கலவரமாகும்.
அதே நேரத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்றும் பொதுவான ரசிகர்கள் சிலர் அவ்வப்போது ஆசைப்படுவதுண்டு. இருவரும் 1995 ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அந்த படத்தில் அஜித் ஒரு சிறு வேடத்தில்தான் நடித்திருந்தார். அதன் பின்னர் இருவரும் நேருக்கு நேர் படத்தில் நடிக்க இருந்தனர். ஆனால் அந்த படத்தில் இருந்து அஜித் விலக சூர்யா நடித்துள்ளார்.
அதன் பின்னர் 30 ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து நடிக்கவேயில்லை. இந்நிலையில் இணைந்து நடிப்பது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் அளித்த பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் “நாங்கள் இருவரும் இப்போது இணைந்து நடிக்க வேண்டிய தேவையில்லை. அவருக்கு என்று ஒரு மார்க்கெட் உள்ளது. அதே போல எனக்கென்று ஒரு மார்க்கெட் உள்ளது. நாங்கள் தனித்தனியாக நடிப்பதால் அதனால் பல குடும்பங்கள் வேலை பெறுகின்றன. அதனால் இப்போதைக்கு சேர்ந்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லை” எனப் பேசியுள்ளார்.
