பிரபல பின்னணி பாடகியான பி.சுசிலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளின் படத்தில் பி.சுசிலா பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. மலர்ந்தும் மலராத, பாலும் பழமும், உன்னை கண் தேடுதே உள்ளிட்ட பாடல்கள் பி.சுசிலாவை திரைத்துறையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
)
கடந்த 1969-ஆம் ஆண்டு அகில இந்திய பாடகிக்கான பரிசு சுசிலாவுக்கு தான் வழங்கப்பட்டது. கடந்த 1957-ஆம் ஆண்டு டாக்டர் மோகன் ராவை சுசிலா திருமணம் செய்து கொண்டார். பி.சுசிலாவின் பாடலை கேட்டு மயங்காதவர்கள் இருக்கவே முடியாது. கதாநாயகிகள் தங்களது படங்களில் சுசிலாதான் பாட வேண்டும் என்று கூறும் அளவு அவர் புகழின் உச்சிக்கு சென்றார்.
நாட்கள் செல்ல செல்ல தனக்கான மார்க்கெட் உயரியதால் சுசிலா சம்பளத்தையும் சற்று உயர்த்தி கேட்டுள்ளார். இந்நிலையில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1962-ஆம் ஆண்டு சுமைதாங்கி படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா உள்ளிட்ட பலர் நடித்தனர். சுமைதாங்கி படத்தில் பாடல் பாடுவதற்காக பி.சுசிலாவை ஸ்ரீதர் அழைத்தார். அவர் சம்பளம் சற்று அதிகமாக கேட்டதால் ஸ்ரீதர் தயக்கம் காட்டினார்.

அவர் இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்ததால் என்ன செய்வது என்று யோசித்தார். இதனால் பாடகி ஜானகியை சுமைதாங்கி படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாட வைத்தார். அந்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. சினிமாவை பொருத்தவரை ஒருத்தர் தவற விடும் வாய்ப்பு மற்றொருவருக்கு படிக்கட்டாக அமைகிறது. அப்படி தான் அடுத்தடுத்த வெற்றி பாடல்களை பாடி ஜானகியும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

