CINEMA
”என் பையனோட ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் பாத்தீங்களா?” – சத்யராஜ் கேட்ட கேள்விக்கு கவுண்டமணி என்ன சொல்லிருப்பாருன்னு நெனைக்குறீங்க!
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது.
அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது. அதன் பின்னர் அவர் நடித்த சில படங்கள் அவரின் தனித்துவ நடிப்பை கோடிட்டு காட்டின. அதன் பின்னர் அவரின் மார்க்கெட் உச்சத்தை நோக்கி சென்றது. செந்திலும் அவர் கூட்டணி அமைத்து உருவாக்கிய லாரல் ஹார்டி வகைக் காமெடி அழியாப் புகழை அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.
கவுண்டமணி எல்லா வகையிலும் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமானர். ஊடகங்களை வெகு அரிதாகதான் சந்தித்து பேட்டிக் கொடுத்துள்ளார். யாராவது பேட்டிக்காக நச்சரித்தால் “தம்பி இங்க பாரு… என்னோட வேல நடிக்குறது… உன்னோட வேல படத்த பாக்குறது. அதோட முடிச்சுக்குவோம்.. இந்த பேட்டி எல்லாம் தேவையில்லாதது…” என நாசூக்காக மறுத்துவிடுவாராம்.
கவுண்டமணி எப்படி படத்தில் சக நடிகர்களைக் கலாய்த்து கவுண்டர் கொடுக்கிறாரா அதே போலதான் நிஜ வாழ்க்கையிலும் எதையும் ஓப்பனாக பேசிவிடுவார். இதைப் பலரும் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் கவுண்டமணிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த சத்யராஜ் தன்னுடைய மகன் சிபிராஜை கவுண்டமணி எப்படி கலாய்த்தார் என்று கூறியுள்ளார்.
ஒரு நேர்காணலில் “நான் ஒரு முறை கவுண்டமணி அண்ணனோடு பேசிக் கொண்டிருக்கும் போது ‘அண்ண என் பையன் சிபி ‘நாய்கள் ஜாக்கிரதைனு ஒரு படம் நடிச்சிருக்கான், பாத்தீங்களா? எப்படி இருக்கு?” எனக் கேட்டேன். அதற்கு அவர் “அந்த நாய் நல்லா நடிச்சுருக்குப்பா” என சொல்லிவிட்டு போய்விட்டார்” எனக் கூறியுள்ளார். சிபிராஜுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஹிட் படமாக நாய்கள் ஜாக்கிரதை அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.