தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று சொல்லி அழைத்து கொண்டாடினர். இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்த நிலையில் முன்னணி நடிகையானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சரோஜா தேவி. தமிழில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார். வயது முதிர்வு காரணமாக இப்போது அவர் எந்த படத்திலும் நடிப்பதில்லை. சரோஜா தேவி எத்தனையோ தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் கடைசி வரை அவரின் மழலை தமிழ் மாறவே இல்லை. ஆதவன் படத்தில் கூட அவரின் மொழி மாறாமல் அப்படியே இருந்தது.
கன்னட சினிமாவில் நடித்திருந்தாலும் அவரைப் புகழின் உச்சத்துக்கு அழைத்து சென்றது தமிழ் சினிமாவில் அவர் நடித்த படங்கள்தான். அதிலும் குறிப்பாக எம் ஜி ஆரோடு அவர் நடித்த படங்கள்தான் அவரை சூப்பர் ஸ்டார் நடிகையாக்கின. ஆனால் எம் ஜி ஆரோடு அவரது முதல் சந்திப்பு இனிமையான ஒன்றாக இல்லையாம்.
அவர் கே சுப்ரமண்யம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எம் ஜி ஆருக்கு அனைவரும் எழுந்து நின்றும் , காலில் விழுந்தும் மரியாதை செய்துள்ளனர். ஆனால் அவர்தான் எம் ஜி ஆர் என்று தெரியாத சரோஜா தேவி அவரைக் கண்டுகொள்ளவே இல்லையாம். ஆனால் அப்போது அவர் யார் என்று கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார் எம் ஜி ஆர்.
அவரது தோற்றத்தால் கவரப்பட்ட எம் ஜி ஆர் அப்போது தான் நடிக்க ஒப்பந்தம் ஆன திருடாதே மற்றும் நாடோடி மன்னன் ஆகிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய சொல்லியுள்ளார். அப்படிதான் சரோஜா தேவியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை அமைந்துள்ளது.
