நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக திகழும் சிவாஜி கணேசன், பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்து வருபவர். அவரின் நடிப்பிற்கு ஈடு வேறு எவருமே இல்லை என்று புகழும் அளவுக்கு எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக ஏற்று நடிப்பவர் அவர். இது ஒரு பக்கம் இருக்க, சிவாஜி கணேசனுக்கு அசைவ உணவுகளில் அதிக ஈடுபாடு உண்டு என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அவருக்கு குயில் மாமிசம் மிகவும் பிடிக்குமாம். அதற்காகவே அவரது வீட்டில் பல குயில்களை மாமிசத்திற்காக வளர்த்து வந்தாராம். ஒரு நாள் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு வந்தாராம்.

லதா மங்கேஷ்கரும் சிவாஜி கணேசனும் உடன் பிறந்தவர்கள் போல் பழகி வந்தவர்கள். பம்பாய்க்குச் சென்றால் சிவாஜி கணேசன் லதா மங்கேஷ்கரின் வீட்டில் தங்குவாராம். லதா மங்கேஷ்கர் சென்னை வந்தால் சிவாஜி கணேசனின் வீட்டில் தங்குவாராம்.
அவ்வாறு ஒரு முறை லதா மங்கேஷ்கர் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு வந்தபோது, பல கூண்டுகளில் பல குயில்கள் அடைந்துகிடப்பதை பார்த்திருக்கிறார். “இது என்ன இவ்வளவு குயில்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள்?” என்று லதா மங்கேஷ்கர் கேட்க, அதற்கு சிவாஜி கணேசன், “எல்லாம் சாப்புடுறதுக்குதான்” என்று பதிலளித்தாராம்.

இதனை கேட்டதும் லதா மங்கேஷ்கருக்கு அழுகையே வந்துவிடுவது போல் இருந்ததாம். “தயவுசெய்து இந்த கூண்டுகளில் இருக்கும் குயில்களை பறக்கவிடுங்கள்” என்று லதா மங்கேஷ்கர் கேட்டுக்கொண்டாராம்.
அவர் அப்படி கேட்ட மறுநிமிடமே, அனைத்து கூண்டுகளிலும் உள்ள குயில்களை பறக்கவிட்டாராம் சிவாஜி கணேசன். அன்றில் இருந்து குயில் கறியை இனிமேல் சாப்பிடவே கூடாது என்று முடிவெடுத்தாராம் சிவாஜி கணேசன்.
