பாட்ஷா பாத்தப்ப எனக்கு நம்பிக்கையே இல்ல.. தேவாதான் மேஜிக் பண்ணிட்டார்.. மேடையிலேயே புகழ்ந்த ரஜினிகாந்த்..

By vinoth on மாசி 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நான்கு தசாப்தங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த் விறுவிறுவென தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிப் படங்களில் நடித்தார். முரட்டுக்காளை திரைப்படம் அடைந்த வெற்றியின் காரணமாக வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக உருவானார்.

   

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் பாட்ஷா படம்தான் ஒரு மைல்கல்லாக இன்று வரை இருந்து வருகிறது. இந்த படத்தின் வெற்றிதான் ரஜினியை தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக்கியது. அந்த படத்தின் வெற்றியால்தான் அவருக்கு அரசியல் சூழலிலும் முக்கியத்துவம் உண்டானது.

   

பாட்ஷா படத்தை சத்யா மூவிஸ் தயாரிக்க சுரேஷ் கிருஷ்ணா இயக்க, தேவா இசையமைத்திருந்தார். இந்த படம் பற்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு பேசிய ரஜினிகாந்த் “முதலில் பாட்ஷா படத்தை பார்த்த போது எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. ஏனென்றால் சரியாக ஒட்டாத காட்சிகள், பிளாஷ்பேக்குக்குள் ஒரு பிளாஷ்பேக் என கதை நீண்டது. எனவே இந்தப் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.  ஆனால் தேவாவிடம் படம் வந்த போது அவர் பின்னணி இசை முடித்து வைத்திருந்தார்.

 

அவரிடம் படத்தைப் பற்றிக் கேட்டேன். என்ன தேவா சார் படம் அண்ணாமலை போல் ஹிட் ஆகுமா என்று, அப்போது தேவா, “என்ன சார்..! இப்படிக் கேட்டுட்டீங்க பாட்ஷா பத்து அண்ணாமலைக்குச் சமம் சார்“ என்று உணர்ச்சியோடு கூறினார். அதன்பிறகே நம்பிக்கை வந்தது. அந்த அளவிற்கு தனது இசையால் பாட்ஷா படத்தை வேற லெவலில் கொண்டு சேர்த்திருந்தார் தேவா.. “ என்று பக்கத்தில் தேவாவை வைத்துக்கொண்டே ஒரு மேடையில் பேசியுள்ளார் ரஜினிகாந்த். தேவா சொன்னது போலவே படம் பிய்த்துக்கொண்டு ஓடியது.