சியான் விக்ரம், தமிழ் சினிமாவில் ஒரு ஆகச் சிறந்த கலைஞனாக மதிக்கப்படுபவர். சேது, காசி, அந்நியன், ஐ என அந்த படங்களில் அவர் ஏற்று நடித்திருந்த கேரக்டர்களும், அதற்காக அவர் செய்த தியாகங்களும், ஒரு கலைஞனுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது. உலகநாயகன் கமலுக்கு அடுத்தபடியாக, கேரக்டர் சிறப்பாக வர, தன்னை வருத்திக் கொள்ளும் நடிகராக இரண்டாம் இடத்தில் இருப்பவர்தான் சியான் விக்ரம்.
மனநலம் பாதிக்கப்பட்டவராக, கண் பார்வை இல்லாதவராக, அப்பாவியாக, கொடூர நோய் தாக்கிய நோயாளியாக என, தனக்கான கேரக்டர் எதுவாக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதித்து, இவரை விட யாரும் அதை சிறப்பாக செய்துவிட முடியாது என நினைக்கிற அளவுக்கு தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்துபவர். துவக்கத்தில் படங்களில் நடிக்க வாய்ப்பின்றி பல படங்களில் பல நடிகர்களுக்கு சியான் விக்ரம் பின்னணி குரல் கொடுத்த காலமும் உண்டு. இயக்குநர் பாலா இயக்கிய சேது தான் இவரை அடையாளம் காட்டியது.
இப்போது, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சியான் விக்ரம். இந்த படத்தில் நடிக்க, தினமும் 3 மணி நேரம் அவருக்கு மேக்கப் போடப்படுமாம். இந்த படத்தை ரப் காப்பியை பார்த்து, பா. ரஞ்சித் அசந்து போயிருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை விட, சர்வதேச அளவில் சிறந்த திரைப்படமாக, ஆஸ்கர் விருது பெறும் தகுதிகளை கொண்ட படமாக, தங்கலான் இருப்பதாக பெருமைப்பட்டு இருக்கிறார். ஆனால், இந்த படத்தை பார்த்த ஒரு முன்னணி சாட்டிலைட் சேனல், இதை நாங்கள் வெளியிட விரும்பவில்லை. இந்த படம் எங்களுக்கு வேண்டாம் என மறுத்து விட்டது. தங்கலான் படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தால், இப்படி முக்கிய சேனல் வேண்டாம் என மறுத்திருப்பது பயங்கர அதிர்ச்சியை, படக்குழுவினருக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
