மத்தியப் பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில், பள்ளித் தேர்வின் போது தேனீக்கள் தாக்கியதில் 9 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெரிய தேனீக் கூட்டம் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாகக் கொட்டியது. இதனால் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்தத் தாக்குதலில் பல மாணவர்கள் காயமடைந்த நிலையில், 9 வயது சிறுவன் ஒருவன் தேனீக்களின் கடுமையான கொட்டுதலுக்கு ஆளாகி மயக்கமடைந்தார். உடனடியாக அந்தச் சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் துரதிர்ஷ்டவசமாகச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தேர்வு நேரத்தில் நடந்த இந்த விபரீத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
