பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பிரபல ‘குல் பிளாசா’ வணிக வளாகத்தில் கடந்த 17-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் 31 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மாயமானவர்களைத் தேடும் பணியின்போது ஒரே கடைக்குள் 30 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்கசிவு காரணமாக உருவான இந்தத் தீ, அங்கிருந்த துணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் மளமளவெனப் பரவி பெரும் பேரழிவை உண்டாக்கியுள்ளது.
கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் உட்புற அமைப்புகள் மிகவும் நெருக்கடியாக இருந்ததால், மீட்புப் படையினர் உள்ளே நுழைந்து பணிகளை மேற்கொள்வதில் பெரும் சவால்களைச் சந்தித்தனர். பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இச்சம்பவம் கராச்சி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
