“இனி மெட்ரோவில் இது செஞ்சா அவுட்”…. ரூ.500 அபராதம் மட்டும் இல்ல… ரயிலை விட்டே இறக்கிடுவாங்க….புது ரூல்ஸ் வந்தாச்சு…!

By Nanthini on சித்திரை 18, 2026

Spread the love

சென்னை மாநகரின் போக்குவரத்து முதுகெலும்பாக விளங்கும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது மாதம் ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணிக்கும் இந்த சேவையில், பயணிகளின் வசதியையும் அமைதியையும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002, பிரிவு 59-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரயிலுக்குள்ளோ அல்லது மெட்ரோ வளாகத்திலோ சக பயணிகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் வகையில் உரத்த குரலில் செல்போனில் பேசுவது, ‘ஸ்பீக்கர் மோட்’ (Speaker Mode) போட்டு உரையாடுவது மற்றும் ஹெட்போன் இன்றி அதிக சத்தத்துடன் இசை அல்லது வீடியோக்களைப் பார்ப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படும்.

   

இந்த விதிகளை மீறி செயல்படும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வெறும் அபராதத்துடன் மட்டுமன்றி, விதிமீறலில் ஈடுபடும் பயணிகளை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மெட்ரோ வளாகத்திலிருந்து வெளியேற்றவும் இந்த சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது. மெட்ரோ பயணத்தை அமைதியான சூழலில் கழிப்பவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைத் தவிர்க்கவே இந்த கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

எனவே, மெட்ரோவில் பயணிக்கும் போது பயணிகள் அனைவரும் கட்டாயம் ஹெட்போன்களைப் பயன்படுத்துமாறும், அலைபேசியில் பேசும்போது மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாத வகையில் மென்மையான குரலில் உரையாடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது சக மனிதர்களின் தனிப்பட்ட அமைதிக்கு மதிப்பளிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இந்த புதிய விதிமுறையை முறையாகப் பின்பற்றி, சென்னை மெட்ரோ பயணத்தை இனிமையான அனுபவமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.