தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், வரும் மார்ச் 4-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறவுள்ள நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு அனுமதி கோரி, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சேலம் மற்றும் வேலூரைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதால் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தக் கூட்டத்தை தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டி அருகே அமைந்துள்ள ஒரு தனியார் திடலில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். கட்சித் தலைவர் விஜய் நேரடியாகக் கலந்து கொண்டு, தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டத்தின் நுழைவாயிலில் QR கோடு மூலம் இந்த அடையாள அட்டைகள் ஸ்கேன் செய்யப்பட்டு, உரிய சரிபார்ப்பிற்குப் பிறகே நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்சித் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கரூர் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவங்களைக் கருத்தில்கொண்டு, இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தற்போது விஜய் தனித்துப் போட்டியிடும் முடிவில் இருப்பதாகத் தெரியும் சூழலில், ‘மக்களுடன் தான் கூட்டணி’ என்பதை வலியுறுத்தி வருகிறார். எனவே, தஞ்சாவூர் சந்திப்பு டெல்டா மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. காவல்துறையினரின் முறையான அனுமதி மற்றும் பாதுகாப்புடன் இந்த நிகழ்வை அமைதியாக நடத்தி முடிக்க நிர்வாகிகள் மும்முரமாகத் தயாராகி வருகின்றனர்.
