கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விளையாடச் சென்ற 4 வயது சிறுவன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கழுகூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வேலு என்பவரது மகன் சஞ்சீவி, தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு கவர் போட்டு மூடப்பட்டிருந்த காரின் உள்ளே யாருக்கும் தெரியாமல் ஏறியுள்ளான். எதிர்பாராத விதமாக காரின் கதவுகள் தானாகப் பூட்டிக்கொண்ட நிலையில், கார் கவர் முழுமையாக மூடியிருந்ததால் போதிய காற்றோட்டம் இன்றி அந்தச் சிறுவன் காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
காணாமல் போன சிறுவனைத் தேடிய பெற்றோர் மற்றும் கிராமத்தினர், நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு காரின் உள்ளே அவன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்; கண் முன்னே விளையாடிய குழந்தை பிணமாக மீட்கப்பட்ட இந்தத் துயரம் அந்த மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.
