விஜய் தலைமையிலான அரசு பதவியேற்றாலும், தேர்தலின் போது அளித்த பிரம்மாண்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிகப்பெரிய நிதிச் சவாலாக இருக்கும். குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை மற்றும் ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள் போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மட்டும் ஆண்டுக்குக் கூடுதலாக சுமார் ₹4 லட்சம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் ஒரு மாநிலத்தின் பொருளாதாரத்தைக் கையாண்டு, இந்த வாக்குறுதிகளைத் தடையின்றி நிறைவேற்றுவதே அவரது முதல் மற்றும் முக்கிய சவாலாக அமையும்.
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக வேரூன்றி இருக்கும் இரண்டு வலுவான திராவிடக் கட்சிகளை (DMK, ADMK) எதிர்க்கட்சி வரிசையில் வைத்துச் சமாளிப்பது விஜய்க்கு எளிதான காரியமாக இருக்காது. நீண்டகால அரசியல் அனுபவமும், அடிமட்ட அளவிலான வலுவான கட்டமைப்பும் கொண்ட இந்தக் கட்சிகள், ஒரு புதிய அரசியல் தலைமையின் ஒவ்வொரு அடியையும் நுணுக்கமாகக் கவனித்து விமர்சிக்கும். இந்த அனுபவம் வாய்ந்த அரசியல் ஆளுமைகளைச் சட்டமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் அரசியல் ரீதியாக எதிர்கொள்வது அவரது இரண்டாவது பெரும் சவாலாகும்
முற்றிலும் புதியவர்களைக் கொண்டு ஒரு அமைச்சரவையை உருவாக்கி, அவர்களைத் திறம்பட வழிநடத்திச் செல்வது விஜய்யின் மூன்றாவது சவாலாகக் குறிப்பிடப்படுகிறது. நிர்வாக அனுபவம் இல்லாத அமைச்சர்களை வைத்துக் கொண்டு, அரசு இயந்திரத்தைச் சுணக்கமின்றி இயக்குவதும், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதும் ஒரு தலைவராக விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய அக்னிப்பரிட்சையாகும். புதியவர்களின் துடிப்புக்கும், அனுபவமிக்க அதிகாரிகளின் நடைமுறைக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து அவர் செயல்பட வேண்டியிருக்கும்.
