சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் ஊராட்சியில் வசிப்பவர் தான் குமரேசன். இவர் லாரி பட்டறை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி செல்வமணி என்ற மனைவியும் மூன்று வயது குழந்தையும் உள்ளார்கள். இந்த நிலையில் நேற்று வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார் இவருடைய மனைவி செல்வமணி. அப்போது இவர்களுடைய மூன்று வயது குழந்தையான பூவரசன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது மாட்டுக் கொட்டகைக்கு சென்று விளையாடி இருக்கிறார்.
அப்போது அங்கிருந்த குருணை மருந்தை குழந்தை எடுத்து வாயில் வைத்துள்ளது. இதை கண்ட செல்வமணி அதிர்ச்சியடைந்து குழந்தையை கையில் தூக்கி உள்ளார். வாயை கழுவி விட்டு பிறகு கணவருக்கு தகவல் கொடுத்துவிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார்கள். ஆனால் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
