சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் தங்களின் மருத்துவத் தேவைகளுக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மஞ்சள் பகுதியில் வெறும் 30 படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதால் பெரும் இடநெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஒரே படுக்கையில் மூன்று முதல் நான்கு பேரை அமர வைத்து மருத்துவப் பரிசோதனைகள் செய்யும் அவல நிலை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக நோயாளிகளுக்குப் புதிய தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இப்பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர் வனிதா மலர், அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிரக் கண்காணிப்பு தேவைப்படாத சாதாரணப் பொது மருத்துவப் பரிசோதனைக்காக வந்த நோயாளிகள் மட்டுமே தற்காலிகமாக ஒரே படுக்கையில் அமர வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் முதல்கட்டப் பரிசோதனைகள் முடிந்தவுடன் உடனடியாகப் பொது வார்டுகளுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மருத்துவமனையில் தற்பொழுது நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளுக்கும் இந்தத் தற்காலிகப் படுக்கை தட்டுப்பாட்டிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், தற்பொழுது வந்துள்ள அனைத்து நோயாளிகளுக்கும் தனித்தனி படுக்கைகள் ஒதுக்கப்பட்டுத் தடையின்றிச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
