தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக கூட்டணி தனது பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சி, இன்று அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. சிறுபான்மையின மக்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இக்கட்சியின் வருகை, திமுக கூட்டணிக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளதாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சியும், தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவையும் தங்களது ஆதரவை திமுகவிற்குத் தெரிவித்து கூட்டணியில் இணைந்துள்ளன.
கூட்டணியில் இணைந்துள்ள இந்த மூன்று கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் தனியரசுவின் ஆதரவும், சிறுபான்மையினர் மத்தியில் மற்ற இரு கட்சிகளின் செல்வாக்கும் திமுகவிற்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய வரவுகள் மூலம் தனது கூட்டணியைப் பலமான நிலையில் தக்கவைத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை விரைந்து முடித்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
