திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, சந்தேகமடைந்த பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவரின் சடலமும், மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆடவர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டன.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (27) மற்றும் அவரது மனைவி ஸ்ரீமதி (20) என்பது தெரியவந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இந்த இளம் ஜோடி, பிழைப்புத் தேடி திருப்பூருக்கு வந்து குடியேறியுள்ளனர். வெல்டிங் தொழிலாளியான சரவணகுமார், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்புதான் மூகாம்பிகை நகரில் உள்ள இந்த வீட்டிற்குத் தன் மனைவியுடன் வாடகைக்கு வந்துள்ளார்.
நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த ஸ்ரீமதியால் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் இருந்த நிலையில், சரவணகுமாரும் சமீபகாலமாகச் சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வறுமை ஒருபுறம் வாட்ட, மறுபுறம் ஸ்ரீமதியின் நடத்தையில் சரவணகுமாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மது போதையில் வீட்டுக்கு வந்த சரவணகுமார், சந்தேகத்தின் உச்சத்துக்கே சென்று ஸ்ரீமதியை ஆத்திரத்தில் கொடூரமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த 4 மாத கர்ப்பிணிப் பெண், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்த அதிர்ச்சியில், என்ன செய்வதென்று தெரியாமல் அந்தப் பிணத்துடனேயே இரண்டு நாட்களாகச் சரவணகுமார் அதே வீட்டில் தங்கியுள்ளார். கொலையை மறைப்பதற்காக, மனைவிக்கு மின்சாரம் தாக்கியது போல நாடகமாடி கைகளைத் தீய்க்கவும் முயன்றுள்ளார். ஆனால், சடலம் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில், நேற்று மதியம் வீட்டின் கதவைத் தாழிட்டுக் கொண்டு மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணத்தில் புகுந்த சந்தேகப் புயலால், பிறக்காத ஒரு பிஞ்சுயிரோடு சேர்த்து இரண்டு இளம் உயிர்கள் பறிபோன இந்தச் சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
