தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டம், குல்குல்பா பகுதியைச் சேர்ந்தவர் ரவி (35). இவருக்கு சுஷ்மா (11), வைஷ்ணவி (9) மற்றும் 7 வயதில் ஒரு மகள் என மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். ரவிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு ரவி தனது மூன்று மகள்களையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தைகளைத் தேடி அலைந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் மூன்று சிறுமிகளும் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமிகளின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தந்தை ரவியைத் தேடியபோது அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு மற்றும் போதை மயக்கத்தில் இருந்த ரவி, தனது சொந்தக் குழந்தைகளையே தண்ணீர்த் தொட்டியில் தள்ளி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண் குழந்தைகள் என்பதாலேயே அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள ரவியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிஞ்சு குழந்தைகள், தந்தையாலேயே கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தெலங்கானா மாநிலம் முழுவதையும் உலுக்கியுள்ளது. மதுப் பழக்கமும், குடும்பப் பூசலும் எப்படி ஒரு தந்தையைக் கொலைகாரனாக மாற்றியுள்ளது என்பதற்கு இந்தத் துயரச் சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
