கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வரும் 14 வயது சிறுவன், கடந்த 6 மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளான். இவனது வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் நபர் ஒருவரின் மகள், அதே பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், அந்தச் சிறுவனைச் சந்திக்க வந்த அவனது நண்பர்கள் இருவர், மேல் வீட்டில் வசிக்கும் மாணவியைப் பற்றி விசாரித்துள்ளனர். அந்த மாணவியின் சமூக வலைதள விவரங்கள் அனைத்தும் தன்னிடம் இருப்பதாகக் கூறி, மூன்று சிறுவர்களும் சேர்ந்து ஒரு திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.
திட்டமிட்டபடி, அந்த மாணவியின் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த சிறுவர்கள், ஒரு போலி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் மாணவியிடம் பேசி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத்தினர் குறித்து அவதூறாக மிரட்டியுள்ளனர். மேலும், அந்த மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அவருக்கே அனுப்பி பயமுறுத்தியுள்ளனர். தங்களின் மிரட்டலுக்குப் பயந்த மாணவியிடம், “உனது ஆபாச வீடியோக்களை அனுப்பினால் மட்டுமே மார்பிங் புகைப்படங்களை வெளியிட மாட்டோம்” என வற்புறுத்தி, அவரிடமிருந்து ஆபாச வீடியோக்களையும் பெற்றுள்ளனர்.
இந்த விவகாரம் இத்துடன் நிற்காமல், மாணவியிடமிருந்து பெற்ற ஆபாசக் காட்சிகளை அவரது தந்தையின் வாட்ஸ்அப் எண்ணிற்கே அந்த மாணவர்கள் அனுப்பியுள்ளனர். கீழ் வீட்டில் வசிக்கும் சிறுவனின் அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி இந்த வீடியோக்களை அனுப்பிய அவர்கள், “சமூக வலைதளங்களில் இதைப் பரப்பாமல் இருக்க வேண்டுமென்றால் 10 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும், இல்லையெனில் உங்கள் குடும்ப மானமே போய்விடும்” என மிரட்டியுள்ளனர். இதனால் நிலைதடுமாறிய மாணவியின் தந்தை, இது குறித்துக் கீழ் வீட்டில் உள்ள சிறுவனிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர்.
இறுதியில், இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், மூன்று சிறுவர்களும் கூட்டாகச் சேர்ந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியது அம்பலமானது. இதையடுத்து, சைபர் கிரைம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மூன்று சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலத்தில் உள்ள அரசு கூர்நோக்கு மையத்தில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெற்றோர்களிடையே பெரும் கவலையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
