சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தற்போது இரு பிரிவுகளாக உடைந்து அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றன. கடந்த மே 13ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சியின் கொறடா உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் இந்த பிளவு தற்போது பகிரங்கமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி வேலுமணி மற்றும் சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமி, அதிரடியாக 26 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார். ஆனால், இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சி.வி.சண்முகம் தரப்பினர், தங்களை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என்றும், தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சட்டமன்றக் குழுத் தலைவர் மற்றும் கொறடா பதவிகள் தங்களது குழுவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் சபாநாயகரிடம் தனித்தனியாக மனு அளித்துப் போட்டி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வருகிறார். இது தொடர்பாக சென்னை பசுமை வழிச் சாலை இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புதிய மாவட்ட செயலாளர்களுடன் நேற்று அவர் அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை திரும்பியுள்ள தமிழக ஆளுநர் ஆர்லெகரை இன்று நேரில் சந்தித்து, இந்த தகுதி நீக்க விவகாரம் குறித்து மீண்டும் மனு அளித்து வலியுறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், எஸ்.பி.வேலுமணி தரப்பினரும் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் தங்களது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். நேற்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்த சி.வி.சண்முகம், காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் இதுகுறித்து விரிவாகப் பேசினர். இரு தரப்பு மனுக்கள் மீதும் இன்னும் பரிசீலனை தொடங்கவில்லை என்றும், மனுக்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகே சட்ட விதிகளின்படி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இரு அணிகளின் இந்த மோதலால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
