கோயம்புத்தூர் கொடிசியா (CODISSIA) மைதானத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ‘ஸ்கை டைனிங்’ (Sky Dining) உணவகத்தை அமைத்திருந்தது. இதில் உணவருந்தச் சென்ற 20 நபர்கள், சுமார் 90 அடி உயரத்தில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்தரத்தில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு ஹைட்ராலிக் லிஃப்ட் மற்றும் ஏணிகளைப் பயன்படுத்தி 20 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், நீண்ட நேரம் உயரத்தில் சிக்கியிருந்ததால் பலரும் அச்சமடைந்தனர். இயந்திரத்தின் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தத் தடை ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
