தென்காசி மாவட்ட எல்லையான ஆலங்குளம்-பழங்கோட்டை சாலையில், சுதந்திரகுமார் (43) என்ற தனியார் பள்ளி ஆசிரியர், மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள சி.ஆர்.காலனியைச் சேர்ந்த சுதந்திரகுமார், ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விடுப்பு எடுத்து வீட்டில் தங்கி இருந்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், சுதந்திரகுமாருக்கும், அஜித் குமார் (28) என்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கும், ஒரு 17 வயது சிறுவனுக்கும் இடையே ஓரினச்சேர்க்கை செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. சம்பவத்தன்று மாலை, காமாட்சிபுரம் கண்மாய் பகுதியில் மூவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அஜித் குமாரும் சிறுவனும் சேர்ந்து, அரிவாளால் சுதந்திரகுமாரைச் சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர். பின்னர் பதற்றத்தில் பைக்கை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். செல்போன் அழைப்புகள் மற்றும் பைக்கின் உரிமையாளர் விவரங்கள் மூலம், கொலையாளிகள் இருவரும் சிக்கினர். ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள அஜித் குமாரையும், அந்தச் சிறுவனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
