தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கல்வித்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கவலை தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் சுமார் 1800 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, 20 மாவட்டங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் சாடியுள்ளார்.
போதிய வழிகாட்டுதலும் நிர்வாகமும் இன்றி பள்ளிகள் எவ்வாறு திறம்பட செயல்படும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், முன்னதாக TET நியமனத் தேர்வுக்கான அரசாணை 149-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு இந்த காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
