வெப் சீரிஸ் பார்த்து 5 மாத ஸ்கெட்ச்.. தந்தை உட்பட 4 பேரை கொடூரமாக தீயிட்டு கொளுத்திய 17 வயது சிறுவன்.. பதறவைக்கும் பின்னணி..!!!

By Muthu Mani on ஆனி 1, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகேயுள்ள ஸ்ரீராம்பூரா கிராமத்தைச் சேர்ந்த ராம் சிங், தனது தாய், இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இதில் இரண்டாவது மனைவி சுர்ஜின் வந்த பிறகு, ராம் சிங் தனது முதல் மனைவியை அவமதித்து, சரியாகக் கவனிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதல் மனைவியின் 17 வயது மகன், தனது தந்தையைக் கொலை செய்ய முடிவெடுத்தான். இதற்காக கடந்த 5 மாதங்களாக பல்வேறு வெப் சீரிஸ்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம் கொலை செய்வதற்கான பயிற்சிகளையும், திட்டங்களையும் அந்தச் சிறுவன் ரகசியமாக வகுத்து வந்துள்ளான்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம் சிங்கும் அவரது இரண்டாவது மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தபோது, சிறுவன் தன் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்தான். அதை எதிர்பாராதவிதமாகப் பார்த்த இரண்டாவது மனைவி சுர்ஜின், அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ராம் சிங்கின் தாய் மற்றும் மருமகள் ஆகியோரையும் சிறுவன் அடுத்தடுத்து கொடூரமாகக் கொலை செய்தான். பின்னர், இதற்கு உடந்தையாக இருந்த தனது தாய் மற்றும் சகோதரியின் உதவியுடன், நான்கு சடலங்களையும் காரின் பின் இருக்கையில் வைத்து, வீட்டின் அருகே கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து விபத்து போல நாடகமாடியுள்ளான்.

   

எரிந்த காரைப் பார்த்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மருத்துவமனைக்குச் செல்லும்போது விபத்து ஏற்பட்டதாக முதல் மனைவி கூறிய நிலையில், 17 வயது சிறுவனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், தந்தை உட்பட 4 பேரையும் கொலை செய்ததை சிறுவன் ஒப்புக்கொண்டான். சிறுவனின் செல்போனை ஆய்வு செய்தபோது கொலை தொடர்பான படங்களை அவன் தொடர்ந்து பார்த்தது உறுதியானது. இந்தத் திட்டமிட்ட படுகொலைச் சம்பவத்திற்காகச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவனது தாய் மற்றும் சகோதரியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.