ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள நவோதயா வித்யா நிகேதன் பள்ளியில் 16 வயதான ஜான்வி என்ற மாணவி பயின்று வந்தார். செவ்வாய்க்கிழமை அன்று பள்ளியில் பிரியாணி சாப்பிட்டதற்காக அந்த மாணவிக்குத் தண்டனை வழங்கப்பட்டு, வகுப்பறைக்கு வெளியே வெயிலில் நிற்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் காலை 11 மணியளவில் துணை முதல்வரின் அறைக்குச் சென்ற ஜான்வி, சுமார் 2 மணி நேரம் கழித்து மதியம் 1:30 மணிக்கே அங்கிருந்து வெளியே வந்துள்ளார். வெளியே வந்தவர் நேரடியாகப் பள்ளியின் 3-வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். படுகாயமடைந்த மாணவியைப் பி.கே. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த 2 மணி நேரத்தில் துணை முதல்வர் அறையில் என்ன நடந்தது, என்ன மாதிரி தண்டனை கொடுக்கப்பட்டது என்று மாணவியின் தந்தை பிரமோத் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பள்ளி நிர்வாகம் தங்களுக்குத் தாமதமாகவே தகவல் தெரிவித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
