திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியில் காதல் விவகாரத்தால் 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ரஜினி – கோமதி தம்பதியரின் கடைசி மகளான தர்ஷினி, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் 19 வயது இளைஞர் நித்தின் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவர்களது காதல் விவகாரம் நித்தினின் பெற்றோருக்குத் தெரியவந்தது.
காதல் விவகாரம் இரு குடும்பத்தாருக்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியது. நித்தினின் தாய் ரேவதி மற்றும் அவரது சகோதரி இலக்கியா ஆகியோர், தர்ஷினியைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் இரு வீட்டாரும் மோதிக்கொண்டனர். அப்போது ரேவதியும் இலக்கியாவும் தர்ஷினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, “என் மகனை காதலிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேட்டு மாணவியை சரமாரியாகத் தாக்கியதுடன், மிகக் கேவலமான சொற்களால் அர்ச்சனை செய்துள்ளனர்.
இந்த மோதலின் போது ஏற்பட்ட காயங்களுக்காக ரேவதி மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், காதலனின் குடும்பத்தினர் ஊர் அறியத் தன்னை அவமானப்படுத்தியதால் தர்ஷினி மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் மனமுடைந்த சிறுமி, யாரும் இல்லாத நேரத்தில் தனது அறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மகளை மீட்டுப் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது குறித்து உடனடியாகக் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜோலார்பேட்டை போலீசார், தர்ஷினியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக்குத் தூண்டியதாக இளைஞர் நித்தின், அவரது தாய் ரேவதி மற்றும் சகோதரி இலக்கியா ஆகிய மூன்று பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். சிறுமியின் உயிரைப் பறித்த இந்தத் துயரச் சம்பவம் சக்கரகுப்பம் பகுதியில் பெரும் பரபரப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பதினைந்து வயதே ஆன பள்ளி மாணவி ஒருவரின் வாழ்க்கை இப்படிச் சிதைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை மண்டியிடச் செய்துள்ளது.
