மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் 15 வயது சிறுவன் ஒருவன், தனது அத்தையை மூங்கில் தடியால் அடித்துக் கொலை செய்து, அவரது உடலை சோபா-கம்-பெட் (Sofa-cum-bed) பெட்டிக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 42 வயதான சகுந்தலா சின்ஹே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனுக்கும் அவரது அத்தைக்கும் இடையே பண விவகாரம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த மூங்கில் தடியை எடுத்து சகுந்தலாவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரத்தக் கறைகளைத் துடைத்த சிறுவன், யாருக்கும் சந்தேகம் வராதபடி உடலை மடித்து சோபாவுக்குள் மறைத்து வைத்துள்ளான்.
சகுந்தலாவைக் காணவில்லை என அவரது உறவினர்கள் தேடியபோது, வீட்டின் சோபாவில் இருந்து துர்நாற்றம் வீசியதால் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து சோபாவைத் திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் சகுந்தலாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சிறுவனைப் போலீசார் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். சிறுவன் என்பதால் அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
