காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நாய் கடித்த விபரத்தை பெற்றோரிடம் மறைத்த 15 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் சபரிவாசன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வெறிநாய் ஒன்றால் கடிக்கப்பட்டுள்ளார். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் தனக்கு நாய் கடித்ததை யாரிடமும் கூறாமல் அச்சிறுவன் மறைத்துள்ளார். இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சபரிவாசனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதைக் கண்ட அவரது தந்தை, உடனடியாக அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனுக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு தலைக்கு ஏறிவிட்டதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், நாய் போன்றே செயல்படத் தொடங்கிய அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடி போன்ற பாதிப்புகளைக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வுடன் கையாள வேண்டும் என்பதை இச்சம்பவம் ஒரு பாடமாக உணர்த்தியுள்ளது.
