உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… உ.பி.யில் கொடூர சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 15, 2025

Spread the love

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஷாஜகான்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தின் அருகே வனப்பகுதியில் மரங்கள் நிறைந்த பகுதியில் நேற்று பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக சென்ற நபருக்கு குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட நிலையில் அங்கு சென்று அவர் பார்த்துள்ளார். அப்போது அங்கு மண்ணுக்குள் பச்சிளம் குழந்தை புதைக்கப்பட்டிருந்ததும் குழந்தையின் கை சிறிய அளவில் மண்ணுக்கு வெளியே இருந்த வாரும் தெரிந்துள்ளது. உடனே அவர் இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மண்ணுக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்டனர்.

உடனே அவசரமாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மண்ணுக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை பிறந்து 15 நாட்களே இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் குழந்தையை மண்ணுக்குள் புதைத்தது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.